ராஜபக்சவினருக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் நேரிடும்-எதிர்க்கட்சித் தலைவர்
அரச மாளிகைகளில் இருந்து கொண்டு இளம் தலைமுறையினரை அடக்குவதற்காக திட்டங்களை வகுத்தாலும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் அந்த இரண்டு மாளிகைகளும் நாட்டை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு பலம் பெற்றுக்கொடுக்கும் மத்திய நிலையங்களாக மாற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கம்பளையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கயிற்று பாலத்தில் ஏறி கரைசேர்ந்த ராஜபக்ச இளவசர்கள்

தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட தினத்தில் தான் கயிற்று பாலத்தில் கரையேற நேரிட்டுள்ளதாக கூறினார். எனினும் தற்போது அந்த கயிற்று பாலத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தின் இளவரசர்களே கரைசேர்ந்துள்ளனர்.
அந்த இளவரசர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட இளம் தலைமுறையினரை அடக்க வேண்டும் என தற்போது கூறுகின்றனர். 220 லட்சம் மக்கள் அநாதரவாக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ராஜபக்சவினர் மற்றும் அவரது தலைமுறையினர் கரைசேர்ந்துள்ளனர்.
ராஜபக்சவினருக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும்

இந்த இளவரசர்களின் ஆலோசனைகளுக்கு அமைய இளைஞர்களுக்கு புனர்வாழ்வு வழங்க புனர்வாழ்வு செயலகம் ஒன்றை கொண்டு வர தயாராகி வருகின்றனர். எதிர்க்கட்சி என்ற வகையில் இதனை எதிர்க்கின்றோம்.
இதனால், ராஜபக்சவினரின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டாம் என தற்போதைய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அப்படியில்லை என்றால், அவருக்கு ராஜபக்சவினருக்கு நேர்ந்த கதியே நேரும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.