இந்தியாவுடன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து கேள்வி எழுப்பிய திலித்
தற்போதைய நிர்வாகத்திடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று ‘சர்வஜன பலய’ கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கோரியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது பொதுமக்களுக்குத் தெரிவிக்காமல் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக, நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவீர குறிப்பிட்டார்.
பொதுமக்கள் கவலை
முன்னர் வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்த அரசாங்கத்தில் உள்ளவர்கள், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஒப்பந்தங்களை தாக்கல் செய்யத் தவறியது ஏமாற்றமளிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பொதுமக்கள் கவலை கொண்டுள்ளதாகவும், எனவே அதன் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
பல முக்கிய துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில், கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பரிமாறப்பட்டன.
இந்த ஒப்பந்தங்கள் எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு உதவி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன என்று அரசாங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.