ஜெலென்ஸ்கிக்கு புடின் விடுத்த அதிரடி அறிவிப்பு.. ரஷ்யாவின் பகிரங்க மிரட்டல்
மாஸ்கோவிற்கு வந்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்றால் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவிற்கு அவர் மேற்கொண்டிருந்த விஜயத்தின் நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பும் போது விளாடிமிர் புடின் முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே ஜெலென்ஸ்கிக்கு வெளிப்படையாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அத்துடன், ஒப்பந்தத்தின் அடிப்படையில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று தான் நம்புவதாகவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கும் புடின்
அது மாத்திரமன்றி, நீண்ட காலமாக நீடிக்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி அதுவென்றும் அவர் கூறியுள்ளார்.
இல்லையென்றால் இந்த மோதல் இராணுவ ரீதியாக தீர்க்கப்படும் என்றும் புடின் மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் மாஸ்கோவில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என புடின் அழைப்பு விடுப்பது இது முதல் முறையல்ல.
அலாஸ்காவில் டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை அடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மாஸ்கோவில் முன்னெடுக்கலாம் என அப்போதும் புடின் அழைப்பு விடுத்திருந்தார்.
ட்ரம்ப் - புடின் சந்திப்பு
ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பைப் பொறுத்தவரை, அத்தகைய சந்திப்பின் சாத்தியத்தை நான் ஒருபோதும் நிராகரிக்கவில்லை என்றே புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனில் தற்போது அமுலில் இருக்கும் இராணுவ சட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டும், அத்துடன் விவாத்திற்குரிய பிரதேசத்தில் முன்னேற்றம் ஏற்பட வாக்கெடுப்பை நடத்தவும் புடின் கோரியுள்ளார்.
இதுவரை புடினுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை, புடின் உண்மையிலேயே ஒரு சமாதான ஒப்பந்தத்தை விரும்புகிறார் என்பதில் பல ஆய்வாளர்களுக்கு நம்பிக்கை இல்லை. மேலும், உலக நாடுகள் உற்றுநோக்கிய ட்ரம்ப் - புடின் சந்திப்பும் எந்த ஒரு முடிவையும் எட்டாமல் முடிவுக்கு வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



