மது அருந்தும் இடமாக மாறியுள்ள வவுனியா பேருந்து நிலைய பொது மலசலகூடம்
வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடம் மதுப்பிரியர்களின் மது அருந்தும் இடமாக மாற்றமடைந்துள்ளமைக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக நகரசபை உறுப்பினர் ரி.கே. இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நகரசபையின் நிர்வாகத்திற்குட்பட்ட பொது மலசலகூடம் தனியார் ஒருவருக்குக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மலசலகூடம் பாவனைக்குதவாத நிலையில் கவனிப்பாரற்ற நிலையில் நீண்டகாலமாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து நகரசபை உறுப்பினர் ரி.கே. இராஜலிங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு கால்வாய் சுத்திகரிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுத்திகரிப்பு நடவடிக்கையின்போது கால்வாய் சீர் செய்யும் நடவடிக்கையை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன்போது கால்வாயை அடைத்து பெருமளவு மதுபான போத்தல்கள் , பியர் ரின், தண்ணீர் போத்தல்கள் என்பனவும் குவியலாக மீட்கப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ள நகரசபை அமர்வில் குறித்த மலசலகூடத்திற்கான அடிப்படை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதுடன், கடந்த மூன்றாண்டு காலமாகப் புதிதாக மூன்று கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தினை திறந்து வைப்பதற்குரிய துரித நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.
இவ்விடயம் குறித்து நகரசபை தவிசாளர், உப நகரபிதா, நகரசபை செயலாளர்
ஆகியோருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன்,
நகரசபை உறுப்பினர் சு.காண்டீபனும் நிலைமைகளைப் பார்வையிட்டு துரித நடவடிக்கை
எடுப்பதாகத் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.