அம்பாறையில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்(Photos)
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (03.02.2023) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோத சூதாட்ட நிலையம், ஆசிரியர் மீது அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்தகோரி பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் ஆலயங்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து பிரதேச செயலகத்தின் முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள ஒன்றிணைந்துள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரம்
இதன்போது அண்மைக்காலமாக போதைப்பொருள் வியாபாரிகளால் பல கொள்ளைச் சம்பவங்கள் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளது.
இப் பிரதேசத்தில் வாழும் நீதிபதி ஒருவரது வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், நீதிமன்ற ஆவணங்களை அழிக்கும் போக்கில் பதிவேட்டறையை தீ வைத்தமை, பிரதேச செயலாளருக்கு நேரடியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல், பாடசாலை ஆசிரியர்கள் மீதான கொலை அச்சுறுத்தல், சூதாட்ட விடுதிகள் அதிகரித்துள்ளது.
இவ்வாறான தொடர் சம்பவங்களினால் பிரதேசத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாகவும் இதனை தடுக்க பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாமை, போன்ற செயற்பாடுகள் காரணமாக பொலிஸார் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் மறைமுக ஆதரவை பொலிஸார் இவர்களுக்கு வழங்குகின்றனரா? பிரதேசத்தில் சூதாட்ட மையங்கள் இயங்கிவருவது தொடர்பான தகவல்களை மக்களால் வழங்கப்படுகின்ற போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டவிரோத செயற்பாடுகளை இப்பிரதேசத்தில் ஊக்குவிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உயர் அதிகாரிகள் அக்கறை கொண்டு அக்கரைப்பற்று பொலிஸாரை இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றச்செயல்களும் பொலிஸாரும்
குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய உறவை பேணும் பொலிஸாரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் வியாபாரத்தை நிறுத்து, போதை பொருள் வியாபரிகளால் ஆசிரியர்கள் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், தனிநபர் சட்டவிரோத செயற்பாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவும் என்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் மற்றும சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கான மனுவை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பிரபாகரனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் வழங்கிய பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.