லசந்த விவகாரத்தில் பொலிஸாருடன் சந்தேகநபர்கள் மோதல்: அவசர உதவிகோரும் பொலிஸார்
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு) மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பல பொலிஸ் குழுக்கள் இணைந்து துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
அதன்படி, அநுராதபுரம் - கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸாருடன் முரண்பாடு
இதையடுத்து,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்ட நிலையில், பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் அடையாளம்
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.

இந்த சந்தேகநபரின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதுடன், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) - 071 859 8888, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு - 011 233 7162 / 071 859 2087 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri