21ஆம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்: மனோ கணேசன்
குறைந்தபட்சமாகத் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை நாடாளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்குச் செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன.
இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
21ஆம் திருத்தம் என்று சொல்லி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ஆம் திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் சொல்ல தொடங்கி உள்ளார்கள்.
தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல்வேறு முன்னுரிமை பிரச்சினைகள் தொடர்பாகத் தேசிய கோரிக்கைகள் உள்ளன. இவற்றை நாங்களும் கடுமையாக ஆதரிக்கின்றோம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், எங்களது முன்னுரிமை பிரச்சினைகள் வேறு.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
ஒரே நாட்டுக்குள் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு, மலையகத்தில் அதிகார பகிர்வு, தோட்ட குடியிருப்புகளைத் தேசிய நிர்வாக வலையமைப்புக்குள் கொண்டு வரல், மொழி உரிமை, மத வழிபாட்டு உரிமை, அகழ்வாராய்ச்சி, வனம் மற்றும் வனஜீவி திணைக்களங்கள், மகாவலி அதிகார சபை ஆகியவற்றின் மூலம் வடக்கு, கிழக்கில் காணி பிடிப்பு, பெளத்த மயமாக்கல், பயங்கரவாத தடுப்பு சட்டம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர் என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
தேசிய கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை எமது பிரச்சினைகளையும் நாம் களத்துக்குக் கொண்டுவர வேண்டும். எமது பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே தான், ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்றுகிறீர்களோ, இல்லையோ, 13ஆம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம். இருப்பதையும் இழக்க இணங்கமாட்டோம்.
பழைய பிரச்சினையைத் தீர்க்கப் போய், புது பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என்று நேற்று நான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உரக்கக் கூறினேன்.
இந்த நிலைப்பாட்டுடன் உடன்படும்படி, அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், அக்கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.