பழைய முறையில் மாகாண சபை தேர்தல் : விடுக்கப்பட்ட வேண்டுகோள்
அவசியமான சட்ட திருத்தங்களை கொண்டு வந்து பழைய முறையில் மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்த வேண்டுமென கொழும்பு சட்ட பீடத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(07.01.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்தாமல்
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இனப்பிரச்சினைக்கு தீர்வான ஒரு படைமுறையான வடிவமாகவே இந்த மாகாண சபை முறையானது கொண்டுவரப்பட்டது.

அந்தந்த மாகாணங்களில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற முதலமைச்சர் அவருக்கு கீழ்வருகின்ற அமைச்சரவை, மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரால் மாகாண சபைகள் நிர்வகிக்கப்பட வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த பல ஆண்டுகளாக மாகாண சபை தேர்தலானது நடத்தப்படவில்லை.
ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர்களால் இந்த மாகாண சபைகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவை அரசியலமைப்புக்கு மாறானவை என்பதுடன் மக்களுடைய ஜனநாயக உரிமையை மீறுகின்ற செயலாகும்.
கடந்த பல வருடங்களாக இந்த மாகாண சபை தேர்தலை நடத்தாமல், ஆளுநரின் கீழ் அதிகாரங்களை பிரயோகிப்பதானது புதிய தேர்தல் முறைமையின் கீழ் எல்லை நிர்ணயம் செய்யப்படாமையே ஆகும்.
இதனை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பல வருடங்களாக பிற்போட்டு வருகின்றனர்.
சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து
புதிய முறையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமாக இருந்தால் எள்ளர் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. எல்லை நிர்ணயம் செய்யப்படுதல் என்பது ஒரு சுலபமான விடயம் அல்ல.
ஏனெனில் இலங்கையில் வெவ்வேறு இன மக்கள் வாழுகின்ற பல்வேறு பிரதேசங்கள் காணப்படுகின்றன. எல்லை நிர்ணயம் என்று வருகின்ற பொழுது அந்த பிரதேசங்களில் பல பிரச்சனைகள் எழலாம்.

எல்லை நிர்ணயம் செய்து, உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்துவது என்பது சாத்தியமான விடயம் அல்ல. இதனால் மேலும் பல வருடங்களுக்கு இந்த தேர்தலை பிற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடாத்தாமல், பழைய முறையின் கீழ் இந்த மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு அவசியமான சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடாத்துதல் வேண்டும்.
வேண்டுமானால் அதற்குப் பின்னர் வரக்கூடிய மாகாண சபை தேர்தல்களை எல்லை நிர்ணயம் செய்த பின்னர் நடத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri