மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசு அஞ்சுகின்றது : சஜித் தரப்பு
மாகாண சபைத் தேர்தலைக் கண்டு அரசு எதற்காக அஞ்சுகின்றது? இந்தத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குள்ள உண்மையான மக்கள் ஆணை என்ன என்பது வெளிப்படும். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசுக்கு நாம் அழுத்தம் பிரயோகிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த அரசு ஊடகப் பிரசாரங்கள் மூலம் முன்னோக்கிச் செல்ல முயற்சிக்கின்றது. தேசிய மக்கள் கட்சி ஆட்சியேற்று ஓராண்டு நிறைவடைகின்றது. தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் அரசு எதனை நடைமுறைப்படுத்தியுள்ளது? வாக்குறுதிகளை ஒருபுறம் வைத்து விட்டு ஊடகப் பிரசாரங்களை முன்னெடுப்பதிலேயே அரசு அவதானம் செலுத்தி வருகின்றது.
அவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அரசியல் பழிவாங்கல்களுக்கும் உட்படுத்துகின்றது. அரசு மாத்திரமின்றி நாடாளுமன்றத்திலும் சபாநாயகரது நடத்தைகளிலும் பிரச்சினையுள்ளது. நாடாளுமன்றத்தில் சபாநாயகர் என்பவர் சகல கட்சிகளுக்கும் பொதுவானவர்.
அவரால் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போதைய சபாநாயகரின் நடத்தையை அவதானிக்கும் போது நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பதே சந்தேகத்துக்கிடமாகவுள்ளது. இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட வழங்கப்படாது எனக் கூறியவர்கள் இன்று முதலீடு என்ற போர்வையில் பல இடங்களை தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் அபிவிருத்திக்கு முதலீடுகள் அவசியமாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
அதேவேளை, பொது இடங்களை அந்நியர்களுக்கு வழங்கும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றோம். ஜனாதிபதித் தேர்தலின் போது மின் கட்டணம் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மிக அழகான கதைகளை மக்களிடம் கூறினார்.
மின் கட்டணங்களை மூன்றில் இடங்கு மடங்கால் குறைக்க முடியும் எனக் கூறினார். தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனக் கூறினார். ஆனால், இன்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர அவர் கூறியபடி குறைக்கப்படவில்லை.
அத்தோடு அண்மையில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஊழல், மோசடிகளை ஒழித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாகக் கூறிய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்காக அரசு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தேசிய மக்கள் சக்தியைப் போன்று இதற்கு முன்னர் எந்தவொரு அரசும் மக்களை ஏமாற்றவில்லை. அதேபோன்றுதான் மாகாண சபைத் தேர்தல் விடயத்திலும் அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.
மேலும் தாமதப்படுத்தாது வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த அரசுகளைப் போன்று இந்த அரசும் மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சித்தால் அது தவறாகும். மாகாண சபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டியவையாகும்.
எனவே, ஆளுநர்களால் அவற்றைத் தொடர்ந்தும் ஆட்சி செய்ய அனுமதிக்க முடியாது. அவசர நிலைமைகளில் அவ்வாறு செய்ய முடியும். ஆனால், வருடக்கணக்கில் ஆளுநர் ஆட்சிக்கு இடமளிப்பது தவறாகும். எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம்.
மாகாண சபைத் தேர்தலைக் கண்டு அரசு எதற்காக அஞ்சுகின்றது? இந்தத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குள்ள உண்மையான மக்கள் ஆணை வெளிப்படும். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதைப் போன்று மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறும் கூட்டு எதிரணியாக அரசுக்கு நாம் அழுத்தம் பிரயோகிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
