மட்டக்களப்பில் 40 பயனாளிகளுக்கு இறால் பண்ணைகளை வழங்க தீர்மானம்
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணப்படும் இறால் பண்ணைகளை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று(10.02.2024) காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்ப ஆலோசனைகள்
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு இடையிலாக ஒரு சங்கத்தினை கட்டி எழுப்ப வேண்டும் எனவும், இங்கு வழங்கப்படுகின்ற நிலத்தினை பயன்படுத்தி இறால் உற்பத்தியை செய்வதற்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாகவும், வழங்கப்படுகின்ற நிலங்களை பெற்றுக்கொண்டு இறால் உற்பத்தியை செய்யாமல் இருக்கக் கூடாது எனவும் உரிய முறையில் இறால் உற்பத்தியை மேற்கொண்டு பலன்களை அடைய வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து எதிர்வருகின்ற வாரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணிகளை வழங்கும் விதமாக அந்த காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கும் நில அளவை திணைக்களத்தினால் அளவீடுகள் செய்து உரிய முறையில் பகிர்ந்து அளிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர், கிழக்கு மாகாண கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுதாகர், உதவி காணி ஆணையாளர் ஜனாப் கே.எல்.எம்.முஸம்மில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



