வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று(10)முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இந்த மனித உரிமைகள் தினத்திலும் எமது உறவுகள் எங்கே? எமது உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அத்துடன் அரசியல் கைதிகளுக்கான விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததுடன் சர்வதேச நாடுகள் மனித உரிமை தினத்திலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வை பெற்று தருவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி-வசந்தரூபன்
அம்பாறை
அம்பாறை மாவட்ட வழிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பல பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அபகரிப்பு
இங்கு கருத்து வெளியிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டோர் தமது உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுவதாகவும் மாறி மாறி வருகின்ற ஒவ்வோர் அரசாங்கங்களும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்கவுமில்லை எனவும், தொடர்ந்தும் வீதி வீதியாகத் தாம் தமக்கான நீதிக்காகப் போராடுவதாகவும் கூறினர்.

ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்கள்,அச்சுறுத்தப்படுவதாகவும் அண்மையில் ஊடகவியலாளர்கள் குமணன் மற்றும் கஜகிரீவன் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டனர் எனவும் தம்மைப் போன்ற செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகளும், புத்தர் சிலை நிறுவுதல் எனும் போர்வையில் நடைபெறும் அபகரிப்புகளும் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாகவும் கூறினர்.
செய்தி-பாறுக்
மட்டக்களப்பு
எமது உறவுகளுக்கான தீர்வு வேண்டும். அது சர்வதேசத்தினூடாவே வேண்டும் என்பதைத் தான் நாங்கள் எங்கள் ஒவ்வொரு போராட்டம் ஊடகவும், ஊடக சந்திப்புகள் ஊடாகவும் வெளிப்படுத்தி வருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டு.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் நடாத்தியது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். ஆனால் நாங்கள் 17 வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டி சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இதுவரைக்கும் எமக்கு நீதி மறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. தற்பாதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் அனைவராலும் போற்றப்பட்டாலும் எமது பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான ஒரு நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இயலாத அரசாங்கமாகவே இருக்கின்றது.
இவர்களும் ஒரு இனவாத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசும் கடந்த காலங்களில் எக்காரணத்திற்காகவும் நாங்கள் இலங்கை இராணுவத்தை விசாரணைக்குட்படுத்த மாட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடி நிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி-குமார்


இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri