வவுனியாவில் கற்குவாரியை அகற்றுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா புதிய சின்னக்குள மக்கள் தமது பிரதேசத்தில் குடிமனைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கற்குவாரியை அகற்றுமாறு கோரி இன்று கற்குவாரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா அக்போபர கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட புதிய சின்னக்குள பகுதியில் உள்ள சிறிய மலைக்குன்றில் கல்லுடைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த கிராம மக்கள்,
குறித்த கற்குவாரியில் கல்லுடைப்பதால் பொதுமக்களின் வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதுடன், எந்தவித அறிவித்தலும் இன்றி வெடிவைத்து கற்களை உடைக்கும் போது அங்கிருந்து சிதறிவரும் கருங்கல் துண்டுகள் அருகில் உள்ளஎமது வீடுகளின் கூரையில் விழுவதுடன் தோட்ட காணிகளுக்கும் விழுகின்றன.
அத்தோடு கற்களை உடைக்க பயன்படும் வெடிமருந்து காரணமாகச் சுவாச பிரச்சினை ஏற்படுவதோடு குழந்தைகள் மயக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகளும் இறந்துள்ளன.
சுற்று வட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் குறித்த கற்குவாரியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே கல்குவாரியில் கல் உடைக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு வருகைதந்த வவுனியா - மாமடு பொலிஸ் அதிகாரி வெடிபொருட்கள் பயன்படுத்தி கல் உடைப்பதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைவாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.











டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
