யாழ்.வைத்தியசாலை வைத்தியர்கள் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை (Photos)
யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப்பட்டி அணிந்து கடமையாற்றியுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான இன்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத்தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பனவற்றை நிவர்த்தி செய்து வளங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கையெழுத்து போராட்டம்
அத்துடன் முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற போர்வையில் அரசினால் பறிமுதல் செய்யப்படும் சம்பள பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதையும் ஒருங்கிணைத்து அரசாங்கத்தினால் நிர்வகிக்க தவறிய மருந்துப் பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.