வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் (10.04.2026) காலை 9 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026ம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம்பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 தொடக்கம் 2026/2/15 வரை புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கான காலம் அறிவித்தல் நோட்டீஸ் மூலம் ஒட்டப்பட்டது.
அங்கத்தவர் இணைவு
அதன் அடிப்படையில் 93 உறுப்பினர்கள் சந்தாப்பணம் கட்டி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களாக இணைந்தார்கள்.

அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் 2026/3/6 அன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
சில மணிநேரத்தின் பின்னர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் தொலைபேசி மூலம் யாப்பின் படி மூன்று மாதங்களுக்கு பிறகு தான் நிர்வாக தெரிவு இடம்பெறும் என அறிவுத்தப்பட்டது.
பின்னர் 42 அங்கத்தவர்கள் தாம் புதிதாக இணைவதற்கு சந்தாப்பணம் கட்டுவதற்கு தயாராக உள்ளனர் என கூறினார். அதனை நிர்வாக உறுப்பினர்களாகிய நாம் ஏற்க முடியாது என கூறினோம். நாம் மூன்று மாதங்கள் காத்திருக்கும் போது புதிய அங்கத்தவர்களை இணைப்பது ஒரு குழப்பமான செயற்பாடு ஆகும்.

பிரச்சினை
இதனால் ஒற்றுமையாக இருந்த எமது கிராமத்தில் பல பிரச்சினைகள் வந்துள்ளன. அதற்கு முழுமையான காரணம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரே ஆவார் என ஆர்ப்பாட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தாம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளருக்கு கொடுப்பதற்கு கொண்டு வந்த கடிதத்தினை பிரதேச செயலாளர் பதில் உத்தியோகத்தரிடம் கொடுக்க சொன்ன போது பதில் உத்தியோகத்தர் குறித்த கடிதத்தினை வாங்க மறுத்தார்.
பின்னர் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் சென்ற போதே குறித்த கடிதத்தினை வாங்கினார் என ஆர்ப்பாட்டதாரிகள் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்.
