கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்காக மகிந்த ஆதரவாளர்கள் : கொந்தளிக்கும் மக்கள் (Video)
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவ் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான டென் பிரசாத், சனத் நிஷாந்த, சமன் லால், மிலன் ஆகியோருக்கு ஜீன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகப் பகுதியில் இருந்து சந்தேக நபர்கள் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ந்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கடந்த மே மாதம் 9ஆம் திகதி வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
குற்றத்திற்கு துணை போனவர்களே கைது செய்யப்பட வேண்டும் எனவும், அப்பாவி இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் யாருக்கும் பயமில்லை. நாட்டிற்காக எதுவானாலும் செய்யுங்கள் என்றே நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்வோம். நாட்டிற்காக நல்லதை செய்யுங்கள் என்றே நாங்கள் எங்களது பிள்ளைகளுக்கு செல்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகப் பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாக பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே அப்பகுதியில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு களத்திற்கு கலகத்தடுப்பு பொலிஸாரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த நிலையில் அவரை கைது செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாக பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம மற்றும் அலரிமாளிகை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மைனாகோகம போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.