ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்: வெளியேறுமாறு போராட்டம் (Video)
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் உயர்தர மாணவர்களால் ஆசிரியர் ஒருவரை வெளியேற கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்றையதினம் (11.08.2023) பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும், பாடசாலை அதிபருக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்தே குறித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த திங்கட்கிழமை (07.08.2023) உயர்தர மாணவர்களின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக பெற்றோருக்கான கலந்துரையாடல் இடம்பெற்றபோது கலந்துரையாடலுக்கு வருகை பெற்றோர்களின் மாணவர்களை குறித்த ஆசிரியர் வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளார்.
வலயக்கல்விப் பணிப்பாளரின் வாக்குறுதி
இதன்போது மாணவிகளிடம் சாதாரணமாக உரையாடுவது போன்று உரையாடி அதனை இரகசியமாக தனது தொலைபேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பாடசாலைக்கும், மாணவிகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்திய ஆசிரியரை இடமாற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெல்லிப்பழை கோட்டக் கல்வி பணிப்பாளர் வேலாயுதர் அரசகேசரி மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மாணவர்களினால் கோரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது.
இதனை வலயக்கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |