பூநகரி சீமெந்து தொழிற்சாலை கட்டுமானத்துக்கு எதிராக தொடரும் போராட்டம் (Photos)
கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளியில் சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக நடத்தும் சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டமானது 07ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் இன்று (09.08.2023)வேரவில் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அனைத்து மக்கள் ஒன்றியத்தால் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி ஆகிய கிராம மக்களை இணைத்து இப்போராட்டமானது சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுழற்சி முறை போராட்டம்
பொன்னாவெளி எனும் பழமை வாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுண்ணக்கல் அகழ்வை மேற்கொள்வதற்கு தனியார் சீமெந்து நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடற்கரைக்கு அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படும் போது அதன் விளைவாக தங்களது கிராமங்களுக்குள் கடல் நீர் உள்வரும் அபாயம் இருப்பதனால் கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்,தொழிற்சாலை கழிவுகள் காரணமாக மோசமான நோய்த்தாக்கங்களுக்கும் பொதுமக்கள் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடற்கரையில் அமைந்துள்ள தங்களது கிராமங்களில் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.








