நரேந்திர மோடிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவருடைய சகோதரர் போராட்டம் நடத்தியுள்ளார். புதுடெல்லியில் இந்த போராட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, அகில இந்திய நியாயவிலைக் கடை வர்த்தகர்கள் கூட்டமைப்பின் துணை தலைவராக செயற்பட்டு வருகிறார்.
இந்தநிலையில், அந்த கூட்டமைப்பு சார்பில் புதுடெல்லியில் நேற்று முன்தினம் ஜந்தர்மந்தரில் போராட்டம் நடைபெற்றுள்ளது. அதில், பிற நிர்வாகிகளுடன் பிரகலாத் மோடியும் கலந்து கொண்டுள்ளார். பதாகைகளை பிடித்தபடி கோஷங்களை எழுப்பியுள்ளார்.
பிரகலாத் மோடியின் கருத்து
இதனையடுத்து,பிரகலாத் மோடி, செய்தியாளர்களிடம் பேசும் போது,“தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவுகள் அதிகரித்து விட்டதாலும், நியாயவிலைக் கடை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டதாலும் தரகு கட்டணத்தை கிலோவுக்கு 20 காசு மட்டும் உயர்த்துவது போதாது.
எனவே மத்திய அரசாங்கம் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யப்படும்.”என குறிப்பிட்டுள்ளார்.