தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி விபத்தில் காலமானார்..!
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிபருமான ஆர்.பி. சௌத்ரி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இன்று(05) காலமானார்.
இவருடைய மறைவு செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
தனது சொந்த வேலை நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றிருந்த ஆர்.பி. சௌத்ரி, உதய்பூர் அருகே காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீதி விபத்தில் சிக்கியுள்ளார்.
சினிமா பயணம்
அவர் பயணித்த கார் மோதலுக்கு உள்ளானதில், அவருக்குப் பெரிய அளவிலான வெளிக்காயங்களோ அல்லது ரத்தக் காயங்களோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், விபத்தின்போது ஏற்பட்ட மிகக் கடுமையான அதிர்ச்சியின் காரணமாக, அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆர்.பி. சௌத்ரி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர். விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஆரம்பகால வெற்றிப் படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு.
குறிப்பாக, பூவே உனக்காக, சூர்யவம்சம், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல மெகா ஹிட் படங்களை வழங்கியுள்ளார். இவருடைய புதல்வர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரும் தமிழ் திரையுலகில் நடிகர்களாகப் புகழ்பெற்றவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஆர்.பி. சௌத்ரி அவர்களின் உடல் உதய்பூரிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.