பிரியந்த படுகொலை விவகாரம்: மறைந்திருக்கும் பின்னணி
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் தற்பொழுது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடன கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட பட்டதாரியான இவர், 2010ம் ஆண்டு முதல் பாகிஸ்தானிலுள் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார்.
பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளிகள் உள்பட நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காணொளிகளை வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மிகவும் தீவிரமாகத் தேடப்படும் குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டதாகப் பஞ்சாப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் பில்லி எனப்படும் இம்தியாஸ் என அடையாளம் காணப்பட்டதுடன், அவர் மறைந்த பிரியந்த குமாரவை சித்திரவதை செய்து அவரது உடலை அவமானப்படுத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டிக்கு செல்லும் பேருந்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார் என்று பஞ்சாப் பொலிஸார் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சியால்கோட் நகரில் வாசிராபாத் சாலையில் இலங்கையர் தாக்கி, எரிக்கப்படும் நிகழ்வைக் காட்டுவதாகக் கூறி பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பிரியந்த குமார தியவடன மேலாளராகக் கடமையாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் இஸ்லாத்துக்கு எதிராக மத நிந்தனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் பரவியது. "தொழிற்சாலையில் இந்தத் தகவல் பரவியதும் ஏராளமான ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு, திரண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் பிரியந்த குமார தியவடனவை உடல் ரீதியான துன்புறுதலுக்கு உள்ளாக்கி எரித்துக் கொன்றனர். நூற்றுக் கணக்கானோர் ஒன்று திரண்டிருந்த நேரத்தில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 11.35 மணியளவில் மீட்புதவி துறையினருக்கு இந்த நிகழ்வு தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அவர்கள் அங்கு செல்லும் முன்னரே பிரியந்த குமார தியவடன எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மாலை 5 மணிக்கு பிரியந்தவின் உடல் எச்சங்கள் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான யூ.எல். 186 விமானத்தின் மூலம் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
நாட்டிற்குக் கொண்டு வரப்படும் பிரியந்த குமார தியவடனவின் உடல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரியந்தவின் இறுதி கிரியைகளை 8 ஆம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு நியாயம் கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நேற்று நடத்தப்பட்டிருந்தன.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பாகிஸ்தான் அரச அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானில் பிரியந்தவின் தொழில் வழங்குநர் ஆகியோருடன், இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு விரைவில் பாகிஸ்தானிடமிருந்து இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.