யாழ்.மாவட்ட பொலிஸ் பிரதானியாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே நியமனம்
யாழ். மாவட்ட பொலிஸ் பிரதானியாகப் பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரியந்த லியனகே, ஆணைக் குழுவின் காலம் நிறைவுற்ற பின்னர் பொலிஸ் தலைமையகத்தில் பொறுப்புக்கள் எவையும் வழங்கப்படாது கடமையில் அமர்த்தப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே அவர் தற்போது யாழ். பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைகள் பிரகாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர், திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும்பொலிஸ்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போது, பாதாள உலகத் தலைவர்களை மையப்படுத்திய செயற்பாடுகளுக்குத் தலைமை வகித்து அந்த பொலிஸ் பிரிவின் முதல் பணிப்பாளராகவும் பிரியந்த லியனகே கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் இதுவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய மகேஸ் சேனநாயக்க பொலிஸ் நலன்புரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டு கொழும்பு அழைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அம்பாறை மாவட்டத்துக்கும் புதிதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய ஏ. கருணாரத்ன மேல் மாகாண குற்றத் தடுப்பு விவகாரங்களைக் கையாள்வதற்காகக் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன் பிரகாரம் அம்பாறையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவின் பிரதானியாகச் செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ். எம்.வை. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.