தனியார்மயப்படுத்தப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு! வெளிவரும் தகவல்கள்
3 ஆயிரம் மில்லியன் டொலர் செலவில், ஒரு லட்சம் பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்க போவதாக கடந்த மே 25 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் உதய கம்மன்பில கூறியதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது இலங்கையில் இருக்கும் ஒரே ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூடி விட்டு, அதனை இயற்கையாக மரணிக்க செய்துள்ளார் எனவும், இதன் ஊடாக எண்ணெய் சுத்திகரிப்பை தனியார்மயப்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜாகொட இதனை கூறியுள்ளார்.
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயற்கையாக மரணிக்க இடமளிப்பார்களா என்பதே எமக்கு முன்னால் இருக்கும் கேள்வி.
இலங்கையில் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஆரம்பிக்க போவதாக மே மாதம் 25 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருந்தார். ஒரு லட்சம் பீப்பாய்களை சுத்திகரிக்கும் ஆலை எனவும் 3 ஆயிரம் மில்லியன் டொலர் முதலீடு இலங்கைக்கு கிடைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அப்படியானால், எண்ணெய் சுத்திகரிப்பையும் தனியார் மயப்படுத்த போகிறார்களா?. இதன்மூலம் கட்டுப்பாடு இன்றி அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை அதிகரிப்பது போல், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகளும் அவ்வப்போது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளதன் மூலம் மிகப் பெரிய பிரச்சினை உருவாகும் எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.