காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை - விசேட சோதனை நடவடிக்கை
வவுனியாவில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்குக் காலாவதியான மருந்து வழங்கப்பட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடவடிக்கை ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்குச் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் நேற்று (12.10) வவுனியா, குடியிருப்பு, குளவீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சையினை பெற்றுக் கொண்டதுடன், மருந்தினையும் பெற்றுச் சென்றிருந்தார்.
அந்த மருந்தினை நோயாளி இரவு பயன்படுத்திய நிலையில் அவருக்கு சுகயீனம் ஏற்பட்டதுடன், உடலில் சில மாற்றங்களையும் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த மருந்துகளைச் சோதித்துப் பார்த்த போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவை காலாவதி ஆகியுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் இன்று (13.10) காலை குறித்த வைத்தியசாலைக்குச் சென்ற அவர் அங்கு கடமையிலிருந்தவர்களிடம் விடயத்தினை தெரியப்படுத்தியதுடன், தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது அங்கிருந்த பணியாளர் காலாவதியான மருந்தை மூன்று மாதத்திற்குப் பயன்படுத்தலாம் என நோயாளிக்குத் தெரிவித்ததாகப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து, குறித்த தனியார் வைத்தியசாலைக்கு வருகை தந்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது காலாவதியான சில மருந்துகளையும் மீட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த தனியார் வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையினர் இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர்.