அரசியல்வாதிகளுக்கு சிறையில் வசதியான வாழ்க்கை, நினைத்த நேரத்தில் மன்னிப்பு - சுதேஸ் நந்திமால் சில்வா
தவறிழைக்கும் அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்குள் வசதியான வாழ்க்கையை வாழ்வதாகவும், அவர்களுக்கு நினைத்த நேரத்தில் மன்னிப்பும் வழங்கப்படுவதாகவும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் பிரதம செயலாளர் சுதேஸ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி முதல், சுமார் 10 கைதிகள் தமது தண்டனையை குறைக்குமாறு கோரி சிறைச்சாலை கூரை மீதேறி அவ்வப்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினமும் குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த போதும், கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமான தீர்வை வழங்க தமது திணைக்களத்திற்கு இயலாதென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுதேஸ் நந்திமால் சில்வா குறித்த விடயத்தை தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், கைதிகளின் விடுதலை குறித்து சிறைச்சாலை திணைக்களம் தீர்மானம் மேற்கொள்ள முடியும்.
குற்றங்களுக்காக தண்டனை பெற்ற பலர் 20 வருடங்களுக்கு மேல் சிறை வாசம் அனுபவித்து வருகின்றர். எனவே சிறைக்கூட விதிகளுக்கு அமைய அவர்களை விடுதலை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.