செய்யாத குற்றத்திற்காக 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இளைஞன்
2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கி, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியை சேர்ந்த சுந்தரலிங்கம் கேதிஸ்வரன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பொன்றில் உறுப்பினர் எனவும் இரண்டு பொலிஸாரை கொலை செய்தார் எனவும் குற்றம் சுமத்தி, கேதிஸ்வரன் தனது 21 வயதில் கைது செய்யப்பட்டார்.
அக்கரைபற்றில் இருந்து பொத்துவில் நோக்கி பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொய்யாக புனைந்த வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.
இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை நடத்திய மொனராகலை மேல் நீதிமன்றம் கேதிஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், கேதிஸ்வரன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கேதிஸ்வரனை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.