அரசாங்கம் திவாலாகவிட்டதா? அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரசாங்கத்திடம் பணம் இல்லையென்றால், அது திவால்நிலைக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எனினும் தற்போது அவ்வாறான நிலை ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், "முந்தைய அரசாங்கம் திவாலானது எனவும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான நிலைக்கு செல்லவில்லை” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“இன்றும் கூட, நாங்கள் அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கிறோம். நம்மால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அப்போதுதான் நாம் திவாலாகிவிட்டோம் என்று சொல்ல முடியும்.
"எங்களிடம் பணம் உள்ளது. இல்லையென்றால், வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களுக்கு நாங்கள் எப்படி ஊதியம் வழங்குகிறோம்? எவ்வாறாயினும், முந்தைய அரசாங்கமே பணப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின்துறை அமைச்சர் காமினி லொகுகே சுமார் 44 பில்லியன் ரூபா பட்டியல் கொடுப்பனவுகள் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் “ஒரு கடுமையான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.