ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிக்கு கோவிட் தொற்று என தகவல்
தம்புள்ளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர பிசிஆர் பரிசோதனையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கோவிட் வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த அதிகாரி தம்புள்ளை - தித்தவெல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என நகர சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிகாரி குடும்பத்தினரை சந்திக்காது பாதுகாப்பாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த அதிகாரியுடன் தம்புள்ளை மாநகர எல்லைக்குள் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 10 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொருளாதார மத்திய நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், வெளியில் இருந்து வந்து அங்கு வியாபாரம் செய்யும் சிலர் மற்றும் லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் ஒருவர் ஆகியோருக்கே கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.
இவர்கள் அனைவரும் தம்புள்ளை நகரை சுற்றி அமைந்துள்ள பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் நகர சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.