தொடரும் நினைவு நாள் அனுஷ்டிப்பு..! ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சன்ன ஜயசுமன
நாடாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் குறித்துக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று(29.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் 18ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறி நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
எமது நாட்டில் தமிழ் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இருப்பினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இவ்வாறான நிகழ்வுகளை முன்னெடுக்க இடமளித்துள்ளமை கவலையளிக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷனல் அக்மீமன, நாடாளுமன்றத்தில் பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான போலிப் பிரசாரங்கள் சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் நாடு பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலையும் உருவாக்கும். எனவே, இது குறித்து ஜனாதிபதி நாட்டுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
நாடாளுமன்றில் பயங்கரவாதிகள் நினைக்கூரல்கள்
இனப்படுகொலை நினைவுகூரல்கள் என்ற பெயரில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதிகளை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தடையின்றி இடம்பெறுகின்றன.
இவ்வாறான நிகழ்வுகளில் பயங்கரவாதிகளின் சின்னங்கள், நிறங்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரங்கமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் அறிந்திருந்தனவா? அவர்கள் அறிந்திருந்தால் இது குறித்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், யாருடைய அழுத்தத்தின் பேரில் அல்லது யாருடைய அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்புப் பிரிவினர் மௌனம் காக்கின்றனர் என்ற கேள்வியை நாங்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கின்றோம்.
பிரிகேடியர் பால்ராஜ் நினைவு நாள் அனுஷ்டிப்பு
கடந்த மே 18 அன்று நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் முக்கியஸ்தரான பால்ராஜ் என்பவரை 'பிரிகேடியர் பால்ராஜ்' என நினைவு கூர்ந்து புகாராரம் சூட்டியுள்ளார்.
'பிரிகேடியர்' அந்தஸ்து என்பது இந்த நாட்டின் உத்தியோகபூர்வ இராணுவத்திலிருந்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது. பால்ராஜ் என்பவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஆனையிறவு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, ஆயிரக்கணக்கான இளம் இராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த ஒரு நபர்.

அத்தகைய நபர் ஒருவரை நாட்டின் உச்சமன்றமான நாடாளுமன்றத்தில் நினைவு கூர இடமளித்தது எந்தவகையில் நியாயம்? குறிப்பாக, அந்தத் தருணத்தில் நாடாளுமன்றத்தின் சபாபீட தலைமைத்துவத்தை வகித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, இந்தப் பயங்கரவாதியை நினைவு கூரும் போது ஏன் எவ்வித தடுத்தல் நடவடிக்கையும் எடுக்கவில்லை? நாடாளுமன்றத்தின் தலைமைத்துவத்துக்குப் பொறுப்புக்கூறும் கடப்பாடு உண்டு.
பால்ராஜை பிரிகேடியராகக் கருதுவதால்தான் அவர் மௌனம் காத்தார்களா? ஜனாதிபதி அவர்களே, உங்கள் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகரவைப் போலவே, ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரிழப்புக்குக் காரணமான அந்தக் கொலைகாரனை நீங்களும் பிரிகேடியராகவே கருதுகிறீர்களா? இல்லையா? என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri