இந்து சமுத்திர மாநாட்டில் உரையாற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு
அவுஸ்திரேலியாவில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க "நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் பிரதான உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08.02.2024) அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.
இந்நிலையில், இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளதோடு, குறித்த மாநாடு நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.
வரைபடம்
மேலும், மாநாடானது இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் வரைபடம் ஒன்றும் தயாரிக்கப்பட உள்ளது.
மேலும், மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர்
எனினும், ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “எங்கள் நீல எதிர்காலம்: இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?” என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு 2 ஆவது இந்து சமுத்திர மாநாடு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |