ஜனாதிபதி ரணில் தற்போது மேற்குலகத்திற்கு சார்பானவர் அல்ல-நாமல் ராஜபக்ச
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் மனித உரிமைகள் பற்றி அதிகமாக பேசினாலும் தற்போது அவருக்கு அது நினைவில் இல்லை எனவும் மேற்குலகிற்கு சார்பாக இருந்த அவர் தற்போது மேற்குலகம் சொல்வதை கேட்பதில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க முன்பு இருந்த ரணில் அல்ல

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னர் இருந்த ரணில் அல்ல. கடந்த காலங்களில் அவர் மேற்குலகத்திற்கு சார்பானவர். தற்போது அவர் மேற்குலகத்திற்கு சார்பானவர் அல்ல. கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க மனித உரிமைகள் பற்றியே அதிகம் பேசினார்.
தற்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு மனித உரிமைகள் பற்றி நினைவுக்கு வந்தாலும், ரணில் விக்ரமசிங்கவுக்கு அப்படியான ஞாபகம் இல்லை. அவர் இப்போது தூதரகங்கள் சொல்வதை கேட்பதில்லை.
வெளிநாட்டு தூதரகங்கள் எதிர்த்தும் நேர்தியாக காலிமுகத்திடல் போராட்டத்தை அகற்றினார். ரணில் விக்ரமசிங்க தற்போது மாறி விட்டார். அதன் காரணமாக அவர் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு நாங்கள் உதவினோம்.
மகிந்த ராஜபக்சவுக்கு பயங்கரவாதிகளை எதிர்கொள்ள முடியும். அதேபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிளர்ச்சி போராட்டங்களை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது.
போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் ஜனாதிபதியிடம்

போராட்டம் என்று அன்று தலைமை தாங்கியவர்கள் தற்போது எங்கு இருக்கின்றனர். தோழர் சமன் ரத்னபிரிய ஜனாதிபதியின் தொழிற்சங்கங்கள் தொடர்பான பணிப்பாளர். தனுஷ்க ராமநாயக்க ஜனாதிபதியின் ஊடக செயலாளர். கீர்த்தி தென்னகோன் ஜனாதிபதியின் ஆலோசகர்.
அர்ஜூன ரணதுங்க, எமது அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் விளையாட்டு பேரவையில் இருக்கின்றார். போராட்டம் நடந்த காலத்தில் சனத் ஜயசூரிய அன்று என்னுடன் கடுமையாக மோதினார்.
அவர் தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பணியிலும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளார். தமித்தா அக்கா, ஐக்கிய மக்கள் சக்தியின் மேடையில் இருக்கின்றார். உண்மையில் போராட்டம் நடத்தியவர்கள் தற்போது காலிமுகத்திடல் உள்ளனர் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய திருப்பி தாக்கிய இருந்தால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்து போயிருப்பர்

அதேவேளை இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கோட்டாபய ராஜபக்ச போராட்டகாரர்களை திருப்பி தாக்கிய இருந்தால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி சென்ற நல்லது. அவர் திருப்பி தாக்கி இருந்தால், 1972 ஆம் ஆண்டு 12 ஆயிரம்,93 ஆம் ஆண்டு 60 ஆயிரம் பேர் இறந்தது போல், ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரையான இளைஞர்,யுவதிகள் இறந்து போயிருப்பார்கள்.
இந்த போராட்டத்தின் பின்னணியில் ரோஹன விஜேவீர மற்றும் அனுர திஸாநாயக்கவின் கும்பலே இருந்தது. டலஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச, கம்மன்பில ஆகியோரும் சதித்திட்டங்களிலேயே இருந்தனர். இவர்களை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் குப்பைக்கூடைக்குள் தள்ளுவார்கள் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.