போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வாதிடும் மனித உரிமை சட்டத்தரணிகள் : விமர்சிக்கும் ஜனாதிபதி
இலங்கையில் இன்று பயங்கரவாதத்தை விட போதைப்பொருள் கடத்தல் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் சில மனித உரிமைகள் சட்டத்தரணிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக பொருளாதார சவால்களில் இருந்து மீண்டு வரும் நிலையில், இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு கூட்டு ஆதரவின் முக்கியத் தேவையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலும் மனித உரிமை மீறல்
போதைப்பொருள் பாவனையிலிருந்து எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்கத் தவறினால், நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து அரசாங்க முயற்சிகளும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021-2022 ஆம் ஆண்டில், சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்தது, வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
எனவே அந்த சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பது இன்றியமையாததாகிவிட்டது. பல பகுதிகளில், கொள்ளைகள் போதைப் பழக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள், இலங்கைக்குள் நுழைவதோடு, கடல் வழியாக பாகிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, மனித உரிமைகளுக்காக வாதிடும் சில சட்டத்தரணிகள் அவர்களுக்காக வாதாட முன்வருகின்றனர்.
இது கேள்விகளை எழுப்புகிறது என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, போதைப்பொருள் கடத்தலும் மனித உரிமை மீறல் என்றே தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் போதைப்பொருள் விற்பனை மனித உரிமை மீறல் அல்ல, போதைப்பொருள் விற்பனையாளர்களை கைது செய்வது மனித உரிமை மீறல் என்று அவர்கள் வாதிடுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |