பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களும் விடுவிக்கப்படும்! ஜனாதிபதி
போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விடுவித்து, அவற்றை பொதுமக்களிடம் திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நடவடிக்கை
போரின் போது அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும், மோதலின் மூடப்பட்ட கிளிநொச்சியின் பிரதான வீதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் தளபதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீண்டும் அவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நிலங்கள்
அது மட்டுமல்லாமல், பாரம்பரியமாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிலங்கள் கூகுள் வரைபடங்களின் அடிப்படையில் வனப் பாதுகாப்புத் துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
அவை, மக்களால் பயிரிடப்பட்ட நிலங்கள் என்ற வகையில், முறையான ஆய்வுக்கு பிறகு அவற்றைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் பலர் போரினால் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்பதையும், மீண்டும் அவற்றை கட்டியெழுப்ப வழி இல்லை என்பதையும் தாம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்ட அவர், அந்த மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
