மத்திய கிழக்கு விவகாரம்! சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் ( LIVE)
புதிய இணைப்பு
சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்போதைய சர்வதேச நிலைமை மற்றும் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமை குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,
ஈரான் கப்பல் விவகாரம்
அத்துடன் ஈரான் கப்பல் நாட்டிற்குள் உடனடியாக அனுமதிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பிலும் இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரேரணையை முன்வைத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக இந்த விவகாரத்தில், தொடக்கத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமையே ஆகும். நமது தாய்நாட்டின் கௌரவம், அத்துடன் நீதி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகிய விவகாரங்களையும் நமது நடுநிலைமையைப் பாதுகாப்பதன் மூலம் நம்மால் நன்மையை அடைய முடியும். எந்தவொரு அழுத்தத்தின் கீழும் அந்த நடுநிலைமை இழக்கப்படாது.
இருப்பினும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்பதை நான் அறிவேன். நாங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு விசுவாசமாக இருக்கிறோம். சில முடிவுகள் சரியான நேரத்தில் எடுக்கப்படவில்லை என்ற எண்ணத்துடன் அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள். அவை முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
நடுநிலைமை கொள்கை
மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தமது கடற்படைக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு ஈரான் அனுமதி கோரியிருந்தது. அந்த அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
அன்றைய தினம் மாலை ஐக்கிய அமெரிக்காவும் ஒரு கோரிக்கையை முன்வைத்தது. தமது நாட்டிற்கு அருகில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.

நாம் மிக தெளிவான ஒரு முடிவை எடுத்து இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை. ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் உள்ள அந்தப் போர் மோதலானது மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை. அத்தகைய அழுத்தங்கள் மத்தியிலும் அந்த நடுநிலைமை கொள்கையை பாதுகாத்துள்ளோம்.
எனவே இலங்கை எப்போதும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையிலுமே செயற்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
இது குறித்து கடந்த 17ஆம் திகதி நடந்த சபை அமர்வில் சபை முதல் பிமல் ரத்நாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கமைய இன்றைய அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விளக்கம்..
மேலும், இதன்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையிலும், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் நெருக்கடி நிலையை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

அதேசமயம், பொதுமக்களுக்கும் கடுமையான சிரமங்களுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து பல்வேறு அச்ச நிலைகளை, பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கமைய, தற்போதைய இக்கட்டான நிலை குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றைய அமர்வில் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.