திருகோணமலையில் நடைபெறவிருக்கும் விசேட அபிவிருத்தி கூட்டத்துக்கான முன்னாயத்த கலந்துரையாடல்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்திற்கிணங்கவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமையவும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்சவின் வழிகாட்டுதலில் மாவட்ட அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விசேட முன்னேற்ற அபிவிருத்தி கூட்டம் மாவட்டம் தோறும் கட்டம் கட்டமாக அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இதன் அடுத்த விசேட கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
மீன்பிடித்துறை, கைத்தொழில் துறையுடன் தொடர்புபட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகள், பிரச்சினைகள், தீர்வுகள் என்றடிப்படையில் இவ்விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
