தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி மட்டக்களப்பிலும் பிரார்த்தனை
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் மட்டக்களப்பு - விபுலானந்தபுரம் தூய ஜோஸப்வாஸ் ஆலயத்திலும் இன்றைய தினம் குறித்த பிரார்த்தனை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள், இலங்கையின் வடக்கு - கிழக்கு வாழ் பொது மக்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் இணைவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரார்த்தனை நிகழ்வில் பிரதேச பொது மக்களும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த விஷேட பிரார்த்தனை வார நிகழ்வில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் பல்லாண்டு காலமாக அடைக்கப்பட்டிருப்போர் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டு சமாதான சௌக்கிய வாழ்வு வாழ வரமருள வேண்டும் என்றும் வேண்டப்பட்டுள்ளது.
அங்கு திருப்பலிப் பூசையும் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினரும், விபுலானந்தபுரம் கிராமவாசியும் செயற்பாட்டாளருமான லெட்சுமி மரிய ஜெயராஜ், பல்லாண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி எங்களது ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்துள்ளோம்.
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசில் கைதிகள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
இப்படிப்பட்ட சிறைக் கைதிகள் அனைவரையும் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திற்கு முன்னராக விடுதலை செய்யுமாறு நாம் தற்போதைய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களது கிராமத்திலிருந்தும் அநேகம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகள் ஜனவரி 7 தொடக்கம் ஜனவரி 14 வரைமுன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.






