தமிழ் அரசியல்வாதிகளிடம் அமைச்சர் பிரசன்ன விடுத்துள்ள கோரிக்கை
தமிழ் அரசியல்வாதிகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களைக் கோருவதில் பயனில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (19.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது. ஆகவே அதுபற்றிய விடயங்களை முன்னெடுக்கும்போது எதிர்ப்புக்களை வெளியிடுவது பொருத்தமல்ல.
அத்துடன், அந்த திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற நிர்வாக சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலான திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு அரசியல்வாதிகள்
அவ்வாறான நிலையில் வடக்கு அரசியல்வாதிகள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்களைக் கோருவதில் பயனில்லை.
மேலும் அவர்கள் தொடர்ச்சியாக விடுக்கும் கோரிக்கையானது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்காது. மாறாக, அவை தொடர்ச்சியாக நீடித்துச் செல்லவே வழிசமைப்பதாக இருக்கும்.
அதேபோன்று தென்னிலங்கையில் வாக்கு வங்கிகளுக்காக கடும்போக்காளர்களாக தம்மைக் காண்பித்து, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களும் தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை குழப்பிவிடக்கூடாது.
வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் தற்போது வரையில் முழுமையான இருதரப்பு நம்பிக்கை ஏற்படுத்தப்படாமல் துருவப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
புரிதலும் நம்பிக்கையும்
இவ்வாறான நிலைமையையே முதலில் மாற்ற வேண்டும். அதற்காக ஜனாதிபதி முதற்கட்டமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில், இரு இன மக்களுக்கும் இடையில் புரிதலும் நம்பிக்கையும் ஏற்பட்டு நல்லிணக்கம் உருவாகின்ற தருணத்தில், மேலதிகமான விடயங்களை பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும்.
இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாமல், அரசியல் தரப்பில் உள்ளவர்கள் தமது நலன்களுக்காக அதி உச்சமான விடயங்களை விவாதித்துக்கொண்டிருப்பதானது சந்தர்ப்பத்தையும் காலத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




