நாளை வரை மின்தடை இல்லை! உயர் நீதிமன்றில் வழங்கப்பட்ட உறுதி
மின் தடை தொடர்பில் உயர் நீதிமன்றில் இலங்கை மின்சார சபை உறுதியொன்றை வழங்கியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு, இன்று (02.02.2023) உயர்நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில், மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் வழங்கிய வாக்குறுதி மீறப்படுகின்றமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
நாளை மீண்டும் விசாரணை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த மனு தொடர்பில் தமது கட்சிக்காரர்கள் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக, கால அவகாசம் வேண்டும் என மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைய குறித்த மனுவை நாளைய தினம் விசாரணைக்கு அழைக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
இந்த நிலையில், நாளைய தினம் வரையில், மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டை இலங்கை மின்சார சபை உயர்நீதிமன்றில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam