தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவேற்றியமை தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிஸாரால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தியதையடுத்து அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நாட்டில் ஏற்பட்ட கோவிட் காரணமாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாமல் காணொளி மூலம் நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வந்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சுமார் ஒருவருடத்துக்குப் பின்னர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டு நீதவான் முன்னிலையில் முன்னிறுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்தி - சரவணன், குமார்





