பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி.. ஆபத்து குறித்து கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் கருத்து
பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் என காரணகாரியங்களுடன் சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பருத்தித்துறை - சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் நேற்று (15) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம், பதிலாக கரையோரங்களில் உள்ள அணைகளை அமைத்துத் தருமாறும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை. 1000 கோடி ரூபா செலவில் இந்திய அரசாங்கம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அநுரவிடம் கோரிக்கை..
2018ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முற்பட்ட போது சமூக மட்ட அமைப்புக்களின் குறிப்பிட்ட பாடசாலைகளின் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது, மீண்டும் இந்திய அரசு முனைகிறது.
அருகில் உள்ள கடற்றொழில் கிராமங்களுடன் கலந்துரையாடவில்லை, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட்டு அபிவிருத்திக்காக கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நடவடிக்கையை நாம் எதிர்க்கிறோம், இத்துறைமுகம் எமக்கு வேண்டாம்.
அநுர அரசே தேர்தல்களின் போது கடற்றொழிலாளர்களின் பக்கமே நாம் இருப்போம், வடக்கு கடற்றொழிலாளர்களை பாதுகாப்போம் என்று கூறினீர்களே, இப்போது என்னவாயிற்று” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஊடக சந்திப்புக்கு முன்னதாக சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை நகர பிதா வின்சன் டீ போல் டக்ளஸையும் பருத்தித்துறை பிரதேச செயலாளரையும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறி மனுக்களையும் கையளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



