துறைமுக நகரம் தனிநாடாக மாறக்கூடிய அபாயம்! - விஜயதாச ராஜபக்ச
கொழும்பு துறைமுக நகரம் தனி நாடாக மாறக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு குறித்த சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபயாராமயவில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகர் இந்த நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து விடுபட்ட ஒர் பகுதியாக உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பகுதிகள் சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதனால் சீனாவிற்கும் பலம்பொருந்திய நாடுகளுக்கும் இடையிலான அதிகார போட்டியில் சிக்குண்டு இலங்கையில் பாரியளவு உயிரிழப்புக்கள் ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளை நிறுத்துவதாக கூறிய போதிலும் அவ்வாறு கிடையாது எனவும் சீனி இறக்குமதி மோசடியில் பாரியளவு இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.