பூநகரி பிரதேச கிராஞ்சி சிவபுர கடற்தொழிலாளர்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
பாதிக்கப்பட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர கடற்தொழிலாளர்கள் கடலட்டை பண்ணை வளர்ப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடு நேற்று (04.10.2022) முன்வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர கடற்தொழிலாளர் சமூகங்கள் தாங்கள் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடி கரையோர தொழிலாளர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது இருப்பதாக தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணைகள்
கரையோரம் முழுவதும் சட்டவிரோதமாக பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றினை அரச அதிகாரிகள், பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்கள் சிலர் நேற்று யாழ்ப்பாணத்தில் பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதிகாரிகள் எவரும் தமது இடத்திற்கு வந்து உரிய தீர்வை பெற்றுத் தர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்தொழிலாளர்கள் சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாட வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
உணவு தவிர்ப்பு போராட்டம்
இதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கடந்த 1ஆம் திகதி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தமக்காக ஒரு அமைப்பு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு தமது போராட்ட வடிவை
மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.