சஜித்திடம் சென்று மீண்டும் ரணிலிடம் திரும்பிய பிரதிநிதிகள்
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளை சேர்ந்த 21 மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
இவர்களில் 9 பிரதிநிதிகள், அம்பலாந்தோட்டை நோனாகமவில் நடந்திய பேச்சுவார்த்தையின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தங்காலை மாநகர சரபயின் உறுப்பினர் மொஹமட் சிராஸ், ஹம்பாந்தோட்டை நகர சபை உறுப்பினர்களான தினேஷ் தர்ஷன, எம். மொஹமட் ரிசான், சரீப்தீன் ஃபாரீஸ், எஸ்.அருண சாந்த, மொஹமட் சம்சுதீன், திஸ்ஸமஹாராம பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி. தம்மிக்க, தங்காலை பிரதேச சபை உறுப்பினர் சமன் குமார, அம்பலாந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் அஹமட் ஷகூர் ஆகியோரே மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த காரணத்தினால், அவர்களுக்கு எதிராக கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்குழு விசாரணைகளை நடத்தியது.
இந்த நிலையில், வஜிர அபேவர்தனவுடன் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது சத்தியக்கடிதங்களை வழங்கிய பின்னர், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளனர்.