தேடித்தேடி வேட்டையாடும் அநுர அரசு - கடும் அச்சத்தில் விகாரைகளில் பதுங்கும் அரசியல்வாதிகள்
இலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் தீவிர முயற்சியில் சமகால அநுர அரசாங்கம் முழு மூச்சாக செயற்பட்டு வருகிறது.
அதற்கமைய அண்மையில் இந்தோனேஷியாவில் தலைமறைவாகி இருந்து முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் பல தலைவர்களை கைது செய்யும் ரகசிய நடவடிக்கைகளை வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலிஸ் விசாரணை
அவர்களின் கைதினை அடுத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதுடன், அடுத்து யார் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர்கள் தமக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களை காட்டிக் கொடுத்து வருவதாக பொலிஸ் விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் கடந்த ஆட்சியின் போது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அச்ச நிலையில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அரசியல்வாதிகள் மிகவும் பயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக குழு உறுப்பினர்கள்
ஜூலம்பிட்டிய அமர மற்றும் வம்பட்டா போன்ற பல குற்றவாளிகள் அரசியல்வாதிகளால் பராமரிக்கப்பட்டனர். எனவே, இப்போது அரசாங்கம் தலையிட்டு நாட்டில் செயற்படும் பாதாள உலகத்தை அடக்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்த பாதாள உலக குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வேட்டையாடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கைதான பாதாள உலக குழு உறுப்பினர்கள் தற்போது நிறைய விடயங்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் சிலர் கோயில்களுக்கும் விகாரைகளுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளனர். இன்று அரசியல்வாதிகள் மிகவும் பயப்படுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் நேற்று ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.




