சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராக நாங்கள் பயணத்தினை மேற்கொள்ளவில்லை - சிவநேசதுரை சந்திரகாந்தன்
அரசியலுக்காகச் சம்பந்தனின் மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சிறுமிகள் துஷ்பிரயோகம் என ஊடகங்களில் வெளிவருவது போன்று சில விடயங்கள் சமூக மட்டத்தில் சென்று எல்லோருடைய மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சமூகத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற செய்வதை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக இப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் நடைபெற்ற சம்பவம் அனைத்து மக்களது பேசு பொருளாக மாறியிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு முடிவாகும். ஒரு சட்டத்தை இயக்குகின்ற நாடாளுமன்ற உறுப்பினருடைய வீட்டிலே இடம்பெற்றிருப்பது கவலைக்குரியது என்பதுடன் இது கண்டிக்கத்தக்கது.
இதை அந்த சிறுமிக்கு நடந்த சம்பவமாக மாத்திரம் பார்க்காமல் ஏன் இந்த சம்பவம் இடம்பெறுகின்றது என ஆராயவேண்டும்.
எமது மக்களிடம் இருக்கின்ற வறுமை காரணமாக அல்லது மலையக மக்களிடம் இருக்கின்ற அவர்களுடைய வாழ்வாதாரம், இடங்கள் காணிப்பிரச்சினை போன்ற காரணங்களின் தாக்கத்தின் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் மாத்திரமல்ல கணிசமான வீடுகளிலேயே சிறுவர்கள், சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
முழு நாடும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். வறுமை நிலையில் இருக்கின்ற போது இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க நாங்கள் பாடுபட வேண்டும். அதைத் தான் என்னுடைய பார்வையிலேயே நான் முன்வைக்கின்ற செய்தியாக இருக்கின்றது. நான் நாடாளுமன்றத்திலும் இதை தான் வலியுறுத்தி இருக்கின்றேன்.
சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறலாம், உலகளவிலும் இடம்பெறுகின்றது. அந்த அடிப்படையில் வறுமை காரணமாக ஒரு சிறுமி வேலைக்குச் சென்று இப்படியான ஏற்றுக்கொள்ளக் கூடாத சம்பவம் இடம்பெற்று விடக்கூடாது என்பதில் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த நாட்டில் எதிர் கட்சிக்கு நியாயமாகப்படுவது ஆளும்கட்சிக்கு நியாயம் இல்லாமல்படும்.
அந்த வகையில் நான் நினைக்கின்றேன் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில், தொழிற்சங்க ஆர்ப்பாட்டம் உண்மையிலேயே கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
அண்மைக்காலமாக ஆசிரியர் சங்கம் தங்கள் உரிமையைக் கேட்கின்றது. தங்களுடைய உரிமையைக் கூறிக்கொண்டு கிராம மட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்குக் கல்வி வழங்காமல் அதைத் தடை செய்து அச்சுறுத்துவது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
அது மாத்திரமல்ல ஆசிரியர் சங்கம் என்ற அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சிலர் நான் ஒரு ஐந்து மாணவனைக் கற்பித்து வழி அனுப்பியிருக்கிறேன், உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றேன் என்று சொல்ல முடியாதவர்கள் இன்று சங்கத்தைப் பற்றியும் மக்கள் உரிமை பற்றிப் பேசுவது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.
அதை ஊடகங்களும் எடுத்து பெரிதாக முன்னுரிமைப்படுத்துவதும் வேடிக்கையான விஷயமாக நான் பார்க்கின்றேன். சுமந்திரன் இந்த சார்பான அரசாங்கத்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன திட்டமிட்டுச் செய்து கொடுத்தார். அவர்களும் கமபரெலியவை நாங்கள்தான் செய்தோம் என்று விதியை போட்டுப் பெயர்ப் பலகை அடித்தவர்கள். அவர்களுடைய அரசியல் கருத்துக்காக நாங்கள் பணி செய்யத்தேவையில்லை.
எங்களுக்கு ஒரு பார்வை இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைவிதி எப்படி நிர்ணயிக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் மக்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கான கல்வி அமைய என்ன செய்ய வேண்டும் என்பதும், எங்கே குளம் கட்ட வேண்டும் எந்த அபிவிருத்தியைக் கூட்டினால் மக்கள் நன்மை அடைவார்கள் என்பது குறித்து எங்களுக்குத் திட்டம் இருக்கின்றது.
திட்டம் இல்லாமல் அரசியலுக்காக அல்லது சம்பந்தருடைய மரணத்திற்குப் பிற்பாடு தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை. எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய கடந்தகால தலைவர்கள் விட்ட பிழைகளைச் சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையைக் கட்டியெழுப்பக் கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்குப் பாடுபடுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.