மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் - சி.சந்திரகாந்தன்
மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதினெட்டு வயது கூட நிறைவடையாத மலையக சிறுமியை வேலைக்கு அமர்த்தியது என்பது ஒரு சோகமான விடயம் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்தை இயற்றுகின்ற மக்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படவேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் அந்த சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகத் தான் பார்க்கின்றேன்.
இந்த விடயமானது ஏனைய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது, தற்போது சமூக மட்டத்தில் ஏற்பட்டிருக்கின்ற இந்த எழுச்சி நிச்சயமாக சமூக மட்டத்தில் மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன். என்னுடைய அறிவுக்கு எட்டியவரை இந்தியாவுடனான எந்தவிதமான அழைப்பும் இதுவரை எமக்கு வரவில்லை இந்த உலகமயமாக்கலில் பெரிய நாடுகள் இடையே போட்டி தன்மையில் இலங்கை பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன்.
குறிப்பாக உங்களுக்குத் தெரியும் 90களில் ஏற்பட்ட உலக மாற்றத்தில் உலக நாடுகளுடைய கூட்டுக் காரணமாகத்தான் இலங்கையில் அழிவு ஏற்பட்டது, இன்று வந்திருக்கின்ற வல்லரசு போட்டியில் கூட இலங்கை மிகவும் கவனமாக நகரும் என்று நான் நம்புகின்றேன்.
மிகப்பெரிய பாரம்பரியங்களைக் கொண்ட நாடு என்ற அடிப்படையிலே இலங்கை பாரிய சவால்களை எதிர்கொண்டு சரியாக நகர்ந்திருக்கின்றது என்பதை என்னால் கூற முடியும்.
வடக்கு கிழக்கை மையப்படுத்தி அரசியல் செய்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதை ஒரு மாற்றுத் திசையில் கொண்டு சென்று சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போட்டி தன்மை இருப்பதாகக் காட்டி இதில் அரசியல் குளிர்காய்ந்து கொண்டு அரசாங்கத்தை மாற்றி விட வேண்டும் என்ற நோக்கோடு அதை உருவாக்கும் வேலைத்திட்டத்தைக் கொண்டு செல்கின்றார்கள்.
நான் அப்படிப் பார்க்கவில்லை, நாங்கள் ஒரு சுயாதீன நாடு என்ற அடிப்படையிலே கிழக்கிலே கூட எந்த நாடாக இருந்தாலும் எங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய முழு மூச்சில் ஊக்கப்படுத்தினால் அதை நாங்கள் வரவேற்போம்.
அதேபோன்று எங்களது சுயாதீன தன்மையை உடைக்கக் கூடிய எண்ணங்கள் அல்லது கருத்துக்கள் வேலைத் திட்டங்களைக் கொண்டு வரக்கூடிய யாராக இருந்தாலும் அதை எதிர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.