உரிய தேவையை நிறைவேற்றுவதற்கு மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன - மகிந்த தேசப்பிரிய
இருக்கின்ற அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது இன்னுமொரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமா மக்களுடைய வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்ளிட்ட மக்களுடைய நலன் சார்ந்த விடயங்களை ஏற்படுத்துவதற்கு உரிய தேவையை நிறைவேற்றுவதற்கு மக்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் புதன்கிழமை(21) ஏற்பாடு செய்திருந்த சூம் தொழில் நுட்பத்தினுடான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு நாட்டைப் பொறுத்தவரையில் 3 வகையான முக்கிய துறைகள் காணப்படுகின்றன. ஒன்று நிறைவேற்று அதிகாரம், அமைச்சரவை, நீதித்துறை, ஆகியனவாகும் சட்டங்களை ஆக்குகின்ற ஒரு உயர் பீடம்தான் நாடாளுமன்றமாகும்.
அரசியல்வாதிகள் அந்த சட்டவாக்க முயற்சிகளுக்குத் தேவையான விடையங்களையும், விதிமுறைகளையும், முன்வைக்கின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கின்ற விடையத்தில் இந்த மூன்று தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.
வாக்குரிமை மற்றும் தகவல் அறியும் உரிமை, கருத்துக் கூறும் உரிமை, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இருக்கின்ற அரசாங்கம் தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது இன்னுமொரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமா மக்களுடைய வேலைவாய்ப்பு, சுகாதாரம், உள்ளிட்ட மக்களுடைய நலன் சார்ந்த விடையங்களை ஏற்படுத்துவதற்கு உரிய தேவையை நிறைவேற்றுவதற்கு மக்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டத்திற்கு முரணான போராட்டங்கள் நடைபெறுகின்றபோது, வன்முறை போன்ற சந்தர்ப்பங்களுக்கும் ஆளாகின்றனர். இந்நிலையில் எம்மிடம் உள்ள ஆயுதம் தான் தகவலறியும் சட்டமூலம். அதனைப் பயன்படுத்தி உரிய அதிகாரிகள் மட்டத்தில் தகவல்களைப் பெற்றுக் கொண்டு இணக்கமான முறையில் மக்களுக்கு வழங்கும் வித்தில் நாம் செய்யப்படல் வேண்டும்.
ஏதாவது ஒரு சம்பவத்திற்குப் போராட்டங்களுக்காக வீதியில் இறங்குவதற்கு முன்னர் இணக்கமான முறையில் செயற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. உதாரணமாகத் தேர்தல் காலத்தில் ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது தொடர்பிலும் கேள்விக்குட்படுத்தவும், நமக்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன.
இவ்வாறு செய்வதுதான் போராட்டங்களைச் செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளும் சாலச் சிறந்த விடையமாக அமையும். ஊடகவியலாளர்கள் வெறுமனே அறிக்கையாளர்கள் மாத்திரம் அல்லாமல் அவர்களுக்குப் பல விடையங்களை ஆராய வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது.
குறிப்பாக விமர்சன ரீதியான கட்டுரைகளை எழுதிக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் மக்களின் வாக்குரிமைகளைப் பாதுகாக்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நீண்ட நாட்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்ற மக்களின் வாக்குரிமை பற்றித் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மாத்திரமின்றி ஊடக நிறுவனங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அதுபோல் வட மாகாணத்திலிருந்து நாடற்றவர்களாக இந்தியாவிலே தங்கியிருப்பவர்கள் தொடர்பிலும் ஆய்வு ரீதியில் செயற்பட்டுத் தீர்வு கிட்டுவது சாலச் சிறந்தது. தற்போதைய நிலையில் கோவிட் - 19 தடுப்பூசி தொடர்பில் தமிழ், முஸ்லிம், சிங்களவர் எனச் சிலர் இன்னும் ஏற்க மறுக்கின்றனர் ஏன் என ஆராய வேண்டும்.
ஊடகவியலாளர்கள் மிகவும் காத்திரமான பங்களிப்புக்களை வழங்குகின்றார்கள். இரண்டு ஊடகவியலாளர்கள் வாக்குரிமையை நீதிமன்றம் சென்று பெற்றுக் கொடுத்த விடயம் காணப்படுகின்றது. செய்திப் பத்திரிகை ஒன்றை ஒரு அரசியல்வாதி விற்பனை செய்வதற்குத் தடை ஏற்படுத்தியபோது அதற்கு எதிராகத் தகவல் உரிமை மறுக்கப்படுகிறது என நீதிமன்றம் இதனைப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
எனவே மக்களுடைய பிரச்சனைகளை வெளிக் கொணர்கின்ற தூணாக ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றார்கள். இவ்வாறு ஊடகவியலாளர்களும், சிவில் அமைப்பினரும் மக்கள் சார்ந்து செயற்படுகின்றபோதே சில நினைக்கின்றார்கள். அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு குழுக்கள் என நினைக்கக்கூடும்.
அது அவ்வாறு அல்ல ஒரு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளைக் கொண்டு செல்வதற்காகத்தான் அவர்கள் செயற்படுகின்றார்கள். மக்களுக்குக் காணப்படுகின்ற வாக்குரிமையை சமூக நீதியைக் கொண்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றதா என்வதையும் சிந்திக்க வேண்டும்.
கொச்சிக்கடை, கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு, மினுவாங்ககொட, நிக்கவரட்டிய, போன்ற இடங்களில், ஏற்பட்ட சம்பவங்களின் வேதனை எமக்கும் ஏற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடல் மாத்திரமின்றி பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு ரீதியாகவும் செயற்படல் வேண்டும். இவ்வாறான சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களின் நிலைமை என்ன என்பது தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்.
அனைவரும் சிந்துவது ஒரே மாதிரியான இரத்தம் என்பதைக் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். எனவே ஊடகவியலாளர் அன்பு கருணை, தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். எல்லை நிருணயம் தொடர்பில் பொலிஸ், உள்ளுராட்சி, பிரதேச செயலகம், உள்ளிட்ட விடையங்கள் தொடர்பில் செயற்பட்டு வருகின்ற மாகாண சபை தேர்தல் வரவேண்டுமாக இருந்தால் ஒரு முறையானதொரு எல்லை நிருணயம் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெறவேண்டும் அல்லது நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தான் அது நடைபெற வேண்டும் என எனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கின்றேன்.
தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தல் எந்த முறையில் நடைபெறவுள்ளது என்பது தொடர்பில் தெரியாது குறிப்பாக ஏற்கனவே உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெற்ற வட்டார முறையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.
இல்லையேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் தனிப்பட்ட பிரேரணையைக் கொண்டு வந்து அதனை அனைவரும் ஏற்றுக் கொண்டு அதனை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக்கு முன்மொழிவு செய்யப்பட்டு அது நாடாளுமன்றத்திலே அங்கீகரிக்கப்பட்டு அது புதியதொரு விடங்களுக்குச் செல்லக்கூடிய விடையங்களும் காணப்படுகின்றன.
எனவே ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும், முக்கியமானவர்களாக்கக் காணப்படுகின்றார்கள். தவறு செய்யாதவர்களாக அரசியல்வாதிகள் இருத்தல் வேண்டும். சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். நல்ல மனிதர்களைக் குறிப்பாக இளைஞர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் போன்ற புதிய விடையங்களையும் புகுத்த வேண்டியுள்ளது. இவை அலசி ஆராயப்பட வேண்டிய விடையமாகவுள்ளது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.