அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - சம உரிமை இயக்கத்தின் ஒருங்கமைப்பாளர்
இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இலங்கை தேவை. அந்த நாடுகளுக்கு நாட்டை தேசிய கட்சிகள் கூறுபோட்டு விற்று அதனூடாக கிடைக்கப் பெறுகின்ற தரகு பணத்தில் அரசியல் நடாத்துகின்ற அரசியல்தான் இருக்கின்றது. எனவே இந்த நாட்டை காப்பாற்ற மக்கள் ஒரு போராட்ட மத்திய நிலையத்தை உருவாக்கி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் உறுப்பினரும், சம உரிமை இயக்கத்தின் ஒருங்கமைப்பாளருமான தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒவ் மீடியா கற்க நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜோன் கொத்தலாவ சட்ட மூலத்தைக் கிழித்தெறியும் சட்டத்துக்கு அமைவாக நாங்கள் முன்னெடுத்த போராட்டத்தை நசுக்கும் முகமாக எங்களுடன் கலந்து கொண்ட தொழிற்சங்கங்கள் மாணவர்கள் தாய்மார்கள் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, சுகாதார சட்டத்துக்கு அமைவாக இந்த போராட்டத்தை நடாத்திய எங்கள் அனைவரையும் கைது செய்து பெண்களின் ஆடைகளைக் கிழித்து வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றி அவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு போனபோது நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்து பொலிஸாரை எச்சரித்தற்காக அரசாங்கம் தன்னிச்சையாக அவர்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளது.
இந்த சட்ட மூலத்துக்கு எதிராக நாங்கள் கிழந்தொழும்போது அதனைப் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் தன்னால் முடிந்ததைச் செய்ததுடன், இந்த சட்ட மூலம் ரணில் மைத்திரி இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது.
இதற்கு முதலும் பல சட்ட மூலங்கள் இந்த மக்களுக்கு எதிராக அவர்களின்; உணர்வுகளைப் பறிக்கின்ற சட்டமூலம் கொண்டு வருகின்ற போது நாங்கள் எதிர்த்து நின்றோம்.
உதாரணமாகத் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கக் கொண்டுவரப்பட்ட சைற்றம், சோபா என்கின்ற அமைப்புக்களைக் கொண்டுவந்து ஒரு சட்டங்களைக் கொண்டுவந்து தொழிலாளர்களையும் மாணவர்களையும் நசுக்குகின்ற சட்ட மூலத்துக்கு எதிராக நாங்கள் பலமுறை போராடியிருக்கின்றோம்.
இதற்குச் சகல தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். அதற்குச் சம உரிமை இயக்கம் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கியிருக்கின்றது.
ஆனால் இந்த சுகாதார சட்டத்துக்கு அமைவாக நாங்கள் ஏற்படுத்தப்பட்ட இந்த போராட்டத்தை நடாத்திய எங்கள் அனைவரையும் கைது செய்து வலுக்கட்டாயமாக ஏற்றி பெண்களின் ஆடைகளைக் கிழித்து அலங்கோலப்படுத்தி அவர்களைத் தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளனர்.
அதேவேளை எஞ்சினியர் கூட்டுத்தாபனத்திலிருந்த 9 பேரை வலுக்கட்டாயமாக வேலையிலிருந்து நிறுத்துவதும் அவர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்த துமிந்த நாகலவை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் இந்த அரசாங்கம் தங்கள் பிற்போக்கான நிலைமையை வெளிக் கொண்டுவராமல் தாங்கள் நல்ல சிறந்த அரசியல் நடாத்துகின்ற மாதிரி மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 15 வருடமாக நடந்த ஆட்சிமுறைக்கும் புதிதாகக் கொண்டுவந்த நிதி அமைச்சர்தான் பின்னின்று உழைத்தவர்.
அவரால் தோற்றுப்போன பின் அவரை அமெரிக்காவிற்கு அனுப்பித் திரும்பக் கொண்டுவந்து நிதி அமைச்சராக வைத்துக்கொண்டு புதுவிதமான அரசியல் செய்கின்றனர். இலங்கை நாடு சீனாவுக்கும் தேவை, இந்தியாவுக்கும் தேவை, அமெரிக்காவிற்கும் தேவை.
இது எங்கள் மக்கள் தொடர்பான நலன்கள் சார்ந்தது அல்ல. அவர்களது நாட்டு நலங்கள் சார்ந்ததற்கு. எனவே இலங்கை மக்களைப் பாவிப்பதற்கு ஒரு கூட்டம் தேவை. அந்த கூட்டம்தான் நாட்டில் இப்போது இருக்கின்ற ஆட்சியாளரும் சரி, இதற்கு முதல் இருந்த ஆட்சியாளராக இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இருந்தாலும் சரி இலங்கையை கூறுபோட்டு விற்கின்ற ஆட்களாகத்தான் இருந்திருக்கின்றனர்.
இது பிழை என நாங்கள் பல போராட்டங்களை நடாத்தினோம். மக்களால் அழுத்தம் கொடுக்கும் போது தாங்கள் விடுகின்றது பிழைனெ அரசு தெரிந்து அதனைத் திருத்துவதற்கு யோசிக்கவேண்டுமே தவிர அடக்குவதற்கு யோசிக்கக்கூடாது. இன்று என்ன நடக்கின்றது என்றால் அடக்குவதற்கான ஒரு சட்ட நடவடிக்கையை கொண்டு வருகின்றனர்.
ஜோன் கொத்தலவை என்கின்ற சட்ட மூலத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் எல்லா விதமான கல்வி நிறுவனங்களையும் உள்வாங்கி அந்த நிறுவனம் ஊடாக சொல்கின்றதை மட்டும் செய்கின்ற ஒரு மாணவர் சமுதாயத்தை வருங்கால சந்ததியை உருவாக்குகின்ற நோக்கம் தான் இந்த அரசாங்கத்தின் நோக்கம்.
இந்த அரசின் நோக்கம் இன்று பல்கலைக்கழகத்துக்குள் உட்புகுந்தது. நாளை பாடசாலை மாணவர்களிடம் இதே திணிப்பைக் கொண்டு வந்துவிடும். கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்க செயலாளர் ஸ்ராலின் ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு மனிதன்.
பின்தங்கிய ஏழை விவசாயிகள், மீனவர்கள் வறுமையிலுள்ள மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு எதுவும் செய்து கொடுக்காமல் வெறுமனமே நடுத்தர வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் ஆனா கல்வி ஒழுங்கை செய்து கொடுப்பது பிழை என்று 3 தடவைக்கு மேல் அவர் தெரிவித்தார்.
இதனை எல்லா தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டு அரசுக்கு இதனை மாற்றி அமைக்கின்ற வழிமுறையைத் தேடுங்கள் எனத் தெரிவித்தது. ஆனால் எதுவுமே அரசாங்கம் செய்யாமல் இப்போது திடீரென பாடசாலைகளைத் திறக்கவேண்டும். இப்போது இயல்பு நிலைக்குத் திரும்புகின்றோம் எனக் காட்டுவதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கின்றது.
எனவே கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்யவேண்டும். எனவே அதனை மாற்றுவதற்கு மக்கள் அரசியல்வாதிகள், ஊடகங்கள் சிந்திக்கவேண்டும்.
இதற்கான முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்கும் போது மட்டும்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியுமே தவிர, வெறுமனமே கட்சி அரசியலை மட்டும் கதைத்துக்கொண்டு இனவாதம், மதவாதம், மொழிவாதம் கதைத்துக்கொண்டு இந்த பிரச்சனையைத் தீர்க்கமுடியாது.
எனவே இதனை எதிர்த்துப் போராடுகின்ற இடதுசாரி தலைமையுள்ள மக்கள் நலன் சார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படும் அமைப்புக்கள் இதன் ஊடாக வெளியில் வந்து ஒரு போராட்ட மத்திய நிலையத்தை உருவாக்கி அரசுக்குக் கொடுக்கப்படுகின்ற அழுத்தத்தின் ஊடாக மட்டுமே இதனை நிவர்த்தி செய்யமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.