மாகாணசபை தேர்தலை நடத்த அச்சப்படும் சமகால அரசாங்கம் - சிறிதரன் எம்.பி தெரிவிப்பு
பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபை தேர்தல்கள் நடைபெறுவது சம்மந்தமாக எங்களிற்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. எந்த முறையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்தால் நாங்கள் அந்த மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.
குறிப்பாக மாகாண சபை என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாகவே கொண்டுவரப்பட்டது. அந்த அடிப்படையில் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்.
அது என்ன முறையில் நடத்தப்பட வேண்டும், எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதற்கு அப்பால், விரைவாகவும், வேகமாகவும் அந்த மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
அத்தேர்தலை நடாத்தி உடனடியாக மாகாண சபைகளில் அதிகார பரவலாக்கல், அதன் ஊடான மக்கள் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். 19ம் திகதி தீர்மானிக்கின்ற திகதியென்பது பலமுறை அவர்களால் சொல்லப்பட்ட செய்திகள் இன்னுமின்னும் அதன் காலம் இழுத்தடிக்கப்படலாம்.
காலத்தை இழுத்தடிக்கப்படாமல் உடனடியாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இப்பொழுது இருக்கின்ற அரசாங்கத்திற்குத் தென்பகுதியிலே கடுமையான விழுக்காடு உண்டு. சிங்கள மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுத்திருக்கின்றார்கள்.
சிங்கள மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். சிங்கள மக்கள் யாரைத் தெரிவு செய்தார்களோ, அவர்களால் அவர்களது பொருளாதாரம் நலிந்திருக்கின்றது. பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.
அங்கே போதைப்பொருட்கள் மக்கள் மத்தியிலே பரவலாக்கப்பட்டிருக்கின்றது. அவர்களின் வாழ்க்கை முறையே மாறியிருக்கின்றது. அதனால் விரக்தி அடைந்திருக்கின்ற சிங்கள மக்கள் அரசுக்கு எதிராகக் கட்டாயம் வாக்களிப்பார்கள்.
அந்த வாக்களிப்பு என்பது இந்த அரசைக் கட்டாயம் ஆட்டம் காணச்செய்யும். அடுத்து அவர்களின் அரசியல் பாரம்பரியம் அல்லது பரம்பரை அரசியலென்பது கேள்விக்குட்படுத்தப்படும் என்ற பயத்தின் காரணமாக அரசாங்கம் இப்பொழுது மாகாண சபைகளின் தேர்தலை நடாத்த பின்னடிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.