21வது திருத்தச் சட்டத்தை பொதுஜன பெரமுன ஆதரிக்குமா: மற்றுமொரு அரசியல் சிக்கல் உருவாகலாம்
நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அமைச்சராக பணிகளை ஆரம்பித்துள்ள சட்டத்தரணி விஜயதாச ராஜபக்சவின் முதலாவது அமைச்சரவை யோசனை காரணமாக அரசாங்கம் சிதறுண்டு போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பணிகளை ஆரம்பித்த பின்னர் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி அமைச்சின் பணிகளை ஆரம்பித்த விஜயதாச ராஜபக்ச, நாட்டின் எதிர்கால நலன்த்திற்கான முடிவுகளை எடுக்கும்,இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகுவதை தடுப்பது உட்பட மிக முக்கியமான ஷரத்துக்களுடன் 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் அந்த திருத்தச் சட்டம் இன்றைய தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டு, உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
நாடாளுமன்றத்திற்கு தேசிய பட்டியல் அல்லது நேரடியாக தெரிவு செய்யப்பட்ட இரட்டை குடியுரிமை பெற்றவர்களின் பதவிகளை இரத்துச் செய்வது 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரதான நோக்கம்.
அதிகார பேராசையில் இருக்கும் பல அரசியல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல் காரணமாக நாட்டை இந்த நிலைமைக்கு தள்ளியுள்ளதால், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரும் வீட்டுக்கு செல்ல வேண்டும் என காலிமுகத் திடலில் போராட்டம் நடத்துகின்றனர்.
இளைஞர் சமூகத்தின் இந்த குரலுக்கு செவிமடுத்து செயற்படாத அரசியல் கட்சிகளை அடுத்த தேர்தலில் மக்கள் மறுதலிப்பார்கள்.
காலிமுகத் திடலில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிராயுதபாணிகளை மானிதாபிமானமின்றி தாக்கிய நபர்களுக்கு மாத்திரமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 10 பேரின் உயிரை பறித்து, சொத்துக்களை சேதப்படுத்திய ஏனைய தரப்பினருக்கு எதிராகவும் தகுதி தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாகவும் விஜயதாச ராஜபக்ச கூறியிருந்தார்.
இந்த நிலையில், 19வது அரசியலமைப்புத் திருத்தச் சடடத்தில் அடங்கிய இருந்த விடயங்கள் அப்படியே புதிய திருத்தச் சட்டமான 21 வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால், அது பற்றி தனியான முடிவு ஒன்றை எடுக்க தமது கட்சிக்கு நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது பற்றி தனியாக கலந்துரையாடி முடிவு ஒன்றை எடுத்து நாட்டுக்கு அறிவிப்போம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, அவற்றை நாடாளுமன்றத்திற்கு பகிர்வதை எமது கட்சி எதிர்க்கவில்லை.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைமைக்கு கொண்டு வர தற்போதைய அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அவற்றை எமது கட்சி ஆதரித்து ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சாகர காரியவசம் கூறியிருந்தார்.
எது எப்படி இருந்த போதிலும் நீதியமைச்சர் கூறியுள்ளது போல், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் உள்ளிட்ட ஷரத்துக்களுடன் 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதன் மூலமாக முக்கியமான பாதிப்பை எதிர்நோக்க போகும் நபர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்ச.
இதன் காரணமாக 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பை முன்வைத்தால், மீண்டும் அரசாங்கம் வெடித்து சிதறுவதை தவிர்க்க முடியாது போகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.