நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பொலிஸார்
தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு நாளான இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகமான அறிவகத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பொலிஸாரும், புலனாய்வு துறையினரும் அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகமான அறிவகத்தில் மாலை 4.30 மணியளவிலிருந்து 5.30 மணி வரை பொலிஸாரும், புலனாய்வு துறையினரும் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அஞ்சலி செலுத்த முயற்சித்தபோது, மிக அத்தியாவசிய தேவை தவிர்ந்தவைக்கு பயணத்தடை உள்ளமையினால் சுகாதார ரீதியிலான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே தாம் தடையேற்படுத்துவதாகத் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து பொது இடத்தைத் தவிர்த்து பிரத்தியேக இடத்தில் விளக்கேற்றி தவிசாளரால் அஞ்சலிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.